கோவை: சென்னையில் இருந்து கோவை வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 7-ம் தேதி பீளமேடு - வடகோவை ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, ரயில் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. கல்வீசிய நபர்கள் யாரென கோவை ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சரவணன்(28), கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த ஜெகதீஷ்(23) ஆகியோரை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.